23/08/2026
என்றும் எமது அன்பான பிரார்த்தனைகளுக்குரியவர் மர்ஹும் அஷ்ஷெய்க். A. அபூஉபைதா (மதனி) அவர்கள்...
மருதமுனை அந்-நஹ்ழா அரபுக் கல்லூரியின் (மர்கஸுத் தஃலீமில் இஸ்லாமி) கௌரவ ஸ்தாபக உறுப்பினர், நிர்வாக சபை உறுப்பினர், முன்னாள் அதிபர் என்றும் எமது அன்பிற்கும், மரியாதைக்குமுரிய மருதமுனையின் மூத்த ஆலிம் அஷ்ஷெய்க். A. அபூ உபைதா (மதனி) அவர்கள் இவ்வுல வாழ்கைக்கு விடை கொடுத்து (வபாத்தாகி) ஒரு வருடம் நிறைவு பெறுகிறது.
எமது கல்லூரி 1995 ஆம் ஆண்டு மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட போது, அதன் ஸ்தாபக உறுப்பினராக இருந்து, காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் கண்ணியத்திற்குரிய முன்னாள் அதிபர் மர்ஹும். அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்களின் ஆலோசனையின் பேரில், எமது கல்லூரியில் சுமார் 16 வருடங்கள் வரை பணியாற்றி, பல ஹாபிழ்களை நமதூருக்கு உருவாக்கித் தந்த கண்ணியத்திற்குரிய அல்-ஹாபிழ். M.H.M. றிஸ்வி அவர்களை தெரிவுசெய்து எமது கல்லூரிக்கு அன்று அழைத்து வந்ததோடு, எமது பிராந்தியத்தில் 100 இற்கும் மேற்பட்ட ஹாபிழ்களையும், 40 இற்கும் மேற்பட்ட உலமாக்களையும் (நஹ்ழிகள்) உருவாக்கும் உயரிய பணிக்கு உறுதுணையாகவும் செயற்பட்டு, எமது கல்லூரியின் நீண்டகால நிர்வாக சபை உறுப்பினராகவும், அதிபராகவும் பணியாற்றி, எமது கல்லூரியின் வளர்ச்சியிலும், அபிவிருத்தியிலும், மாணவர்களின் நலனிலும் மிகுந்த அக்கறையோடும் செயற்பட்டதோடு, தனது இரண்டு மகன்களை எமது கல்லூரியில் ஆரம்ப மாணவர்களாக இணைத்து, அவர்கள் இருவரையும் ஹாபிழ்களாகவும் உருவாக்கியிருந்தார்.
அட்டாளைச்சேனை ஷர்கிய்யா அரபுக் கல்லூரியின் மௌலவி பட்டதாரியும், மருதமுனையின் முதலாவது மதீனா பல்கலைக்கழக (மதனி) பட்டதாரியுமான மர்ஹும் அவர்கள், மருதமுனை ஜம்மியத்துல் உலமாவின் செயலாளராகவும், பின்னர் அதன் தலைவராகவும், 2002 இனப்பிரச்சினை காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்திலுள்ள 03 மாவட்டங்களையும் இணைத்து விஷேடமாக உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண ஜம்மியத்துல் உலமாவின் செயலாளராகவும் இருந்து, பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து தனது மார்க்கப் பணிகளையும், சமூகப் பணிகளையும் ஆற்றுவதில் உறுதியாக செயற்பட்டதோடு, மருதமுனை ஸகாத் நிதியத்தை ஸ்தாபிப்பதிலும் ஒரு முன்னோடியாக செயற்பட்டார்.
மேலும் நமது மருதமுனை பிரதேசத்தில் முதன்முறையாக மதீனா ஹஜ் ட்வர்ல்ஸ் எனும் பெயரில் ஹஜ் பயண முகவர் நிறுவனம் ஒன்றை உருவாக்கி அதனூடாக நமது பிராந்தியத்தைச் சேர்ந்த பல சகோதர, சகோதரிகள் இலகுவாக புனித ஹஜ் கடமைகளையும், உம்றாக்களையும் நிறைவேற்றுவதற்கும் வழிகாட்டியாக நின்றார்.
குறிப்பாக தனது அயராத முயற்சியினால் மதீனா பல்கலைக்கழக பட்டச் சான்றிதழை வைத்து ஆசிரியர் சேவைக்குள் நுழைந்து பல வருடங்கள் ஆசிரியராகவும் பணியாற்றிய மர்ஹூம் அவர்கள், அதன் பின்னர் அனைத்து அரபு நாட்டுப் பல்கலைக்கழகங்களிலிருந்தும் பட்டம் பெற்று வந்த, இலங்கையைச் சேர்த்த பட்டதாரிகள் பலரும் இலகுவாக அரச நியமனத்தை பெறுவதற்கு ஒரு மூலகர்த்தாவாக அமைத்திருந்தார்.
அவர் வபாத்தாகி ஒரு வருடம் நிறைவு பெறும் இத்தருணத்தில், எமது கல்லூரியின் வளர்ச்சியிலும், அபிவிருத்தியிலும் அன்னாருடைய காத்திரமான பங்களிப்புக்களை எமது அந்-நஹ்ழா சமூகம் என்றும் நன்றியோடு நினைவு கூர்வதோடு, அன்னாருடைய நற்பணிகளை வல்ல அல்லாஹுத்தஆலா பொருந்திக் கொண்டு, அவர்களுடைய பாவங்களை மன்னித்து உயர்தரமான ஜன்னதுல் பிர்தவ்ஸை வழங்க வேண்டும் எனவும் நாம் அனைவரும் பிரார்த்தித்துக் கொள்கிறோம்.
இவ்வண்ணம்,
நிர்வாக சபை மற்றும் பழைய மாணவர்கள்
அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி
மருதமுனை
தகவல் தொகுப்பு:
செயலாளர்,
அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி
மருதமுனை.