05/08/2026
GCE A/L & Scholarship பரீட்சை ஏற்பாடுகள் குறித்து இன்று விசேட ஆலோசனை..!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை நிலைமையை முன்னிட்டு, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சை தொடர்பான ஏற்பாடுகள் குறித்து இன்று விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில், நிலவும் மழையால் பரீட்சை நடவடிக்கைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அவற்றை சமாளிக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன, தற்போது மழையின் தாக்கம் அதிகரித்திருந்தாலும், ஆகஸ்ட் மாதம் பொதுவாக மழை குறைவாகப் பதிவாகும் காலமாகும் என்றும், பருவக்காற்றின் தீவிரத்தால் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை தற்காலிகமானது என்றும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 6 ஆம், 7 ஆம், 8ஆம் திகதிகளுக்குப் பின்னர் மழை ஓரளவு குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், உயர்தரப் பரீட்சைகள் 10ஆம் திகதிக்குப் பின்னரே ஆரம்பமாகவுள்ளதால் அதற்குள் தற்போதைய வானிலை தாக்கம் தணியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், 6ஆம் திகதிக்குப் பின்னர் பசிபிக் பெருங்கடல் பகுதியில் உருவாகவுள்ள சூறாவளி நிலைமையின் தாக்கத்தால் நாட்டின் சில பகுதிகளில் மீண்டும் மழைவீழ்ச்சி ஓரளவு அதிகரிக்கக்கூடும் என அஜித் விஜேமான்ன எச்சரித்துள்ளார்.