18/09/2025
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் முத்தமிழ்விழா 13.09.2025 சனிக்கிழமை பேர்ண் மாநிலத்தில் Markthalle Burgdorf மண்டபத்தில் தமிழர் பாரம்பரிய இசையாகிய இன்னியத்துடன் தொடங்கி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த தகைசால் பேராசிரியர் முனைவர் அருணாசலம் சண்முகதாஸ் அவர்கள், மேனாள் ஆய்வுப் பேராசிரியர் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள், மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் மற்றும் சிவருசி தர்மலிங்கம் சசிகுமார் அவர்கள், தமிழ்க் கல்விச்சேவையின் மாநில இணைப்பாளர்கள், துறைப் பொறுப்பாளர்கள், முதல்வர்கள், ஆசிரியர்கள், செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், ஆர்வலர்கள் என அரங்கம் நிறைந்த மக்களுடன் பெருவிழாவாக நடைபெற்றது.
தமிழ்க் கல்விச்சேவையின் முப்பதாவது ஆண்டு சேவையைச் சிறப்பிக்குமுகமாக, அதன் வரலாற்றைக் காட்சிப்படுத்தும் காணொளிக்காட்சி இடம்பெற்றது. அத்தோடு, தமிழ்ப்பள்ளிகளின் சுருக்க வரலாறுகள் அடங்கிய 30 ஆண்டு நிறைவுச் சிறப்பு மலரும் மதிப்பளிப்பு நிழற்படங்கள் அடங்கிய முத்தமிழ்விழா மலரும் வெளியிடப்பெற்றன.
2024ஆம் ஆண்டுமுதல் செயற்பட்டவரும் மொழி பண்பாட்டு நிறுவனத்தின் (ILC) தமிழ் கற்பித்தலில் பட்டயக்கல்வியை நிறைவுசெய்த முதல்தொகுதி மாணவர்களுக்கான பட்டயமளிப்பு நிகழ்வும் இவ்விழாவில் இடம்பெற்றது. ஐரோப்பிய நாடுகள் தழுவிய வகையிலே மேற்கொள்ளப்பெற்ற இப்பட்டயக்கல்வியில் சுவிற்சர்லாந்து, பிரித்தானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 32 ஆசிரிய மாணவர்கள் பட்டயத்தைப் பெற்றிருந்தார்கள். அத்தோடு, ILC இலே இணைந்து தமிழை இரண்டாவது மொழியாகக் கற்கும் வெளிநாட்டவருக்கான சான்றிதழ்களும் வழங்கப்பெற்றன.
2025ஆம் ஆண்டு தமிழ்மொழிக்கல்வியில் ஆண்டு 10 இனை நிறைவுசெய்த 247 மாணவர்கள், ஆண்டு 12 இனை நிறைவுசெய்த 251 மாணவர்களுக்கான மதிப்பளிப்பும் தமிழ்க்கல்விப்பணியில் 30, 25, 20, 10 ஆண்டுகள் நிறைவுசெய்த மாநில இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்கள், ஆசிரியர்களுக்கான மதிப்பளிப்பும் இடம்பெற்றன. 25 ஆண்டுகள் பணிநிறைவு செய்த மாநில இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்களுக்கு ‘தமிழ்ச்சுடர்’ என்ற உயரிய விருதும் 25 ஆண்டுகள் பணிநிறைவினைச் செய்த ஆசிரியர்களுக்கு ‘தமிழ்மணி’ என்ற உயரிய விருதும் வழங்கி மதிப்பளிக்கப்பெற்றது.
ஐரோப்பிய பொது மொழிக்கட்டமைப்பக்கு அமைய தமிழ்மொழிக் கல்வியில் ஆண்டு 10 சித்தியடைந்த மாணவர்களுக்கு B2 தரச்சான்றிதழும் ஆண்டு 12 சித்தியடைந்த மாணவர்களுக்கு C1 தரச்சான்றிதழும் ILC ஊடாக வழங்கப்பெற்றது.
தமிழ்க் கல்விச்சேவையின் விளையாட்டுத்துறைக்கான www.tess-sports.ch எனும் புதிய இணையத்தளமும் அறிமுகப்படுத்தப்பெற்றது.
முத்தமிழ் விழாவின் அனைத்துப் பணிகளிலும் இளையோர் உள்வாங்கப்பெற்று, மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருந்தனர். பெரியவர்கள், இளையவர்கள் என அனைவரதும் ஒருமித்த உழைப்பின் அறுவடையாகச் சிறப்பாக நடைபெற்ற முத்தமிழ் விழா 2025 எமது மொழி, கலை, பண்பாடு என்பவை அடுத்த தலைமுறையினரிடம் தக்கவாறு கையளிக்கப்படுகின்ற செய்தியையும் தமிழ்மொழியைத் தமிழர் அல்லாதோருக்கும் கற்பித்துத் தகைநிறை சான்றிதழினை வழங்கக்கூடிய மொழி பண்பாட்டு நிறுவனம் ஒன்றையும் தமிழ்க் கல்விச்சேவை தன் முப்பது ஆண்டு வரலாற்றில் உருவாக்கியிருக்கிறது என்ற செய்தியையும் வெளிப்படுத்திநின்றது.
இவ்விழா சிறப்புறக் கடுமையாக உழைத்த அனைவருக்கும் தமிழ்க் கல்விச்சேவை நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.