29/07/2017
நூற்றாண்டு விழாவை நோக்கி நமது செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி:
நூறு ஆண்டுகளை கடந்து பயணித்து விழாக்கோலம் காண்கின்ற எங்கள் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்க உள்ள அனைத்து நல் இதயங்களுக்கும் எங்களது அன்பான வணக்கம்.
ஒரு நாட்டின் எதிர்காலம் அதன் கல்விக் கூடங்களின் மூலமாக வடிவமைக்கப்படுகிறது என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகின்றது. ஆம், பல்லாயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கி அவர்களின் வாழ்வை மேன்மையுறச் செய்த எங்களது அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியானது தற்போது நூறாவது ஆண்டில் பயணிக்கின்றது. எங்களது பள்ளியானது அன்றைய ஒருங்கினைத்த வடஆற்காடு மாவட்டத்தில் 27/08/1917 அன்று தொடங்கப்பட்டது. அதன் பின்னர் 31/03/1966 அன்று வரையில் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியாக இயங்கி வந்தது. 04/07/1966 அரசினர் உயர்நிலைப்பள்ளி என்று பெயர் மாற்றம் பெற்றது. 01/07/1978 அன்று முதல் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு இன்று வரையில் உயர்ந்ததொரு பள்ளியாக இயங்கி வருகிறது.
எங்கள் பள்ளி 1917 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபோது ஒரு தலைமையாசிரியர் மற்றும் ஐந்து உதவி ஆசிரியர்களைக் கொண்டு இயங்கியது. அவ்வாண்டில் மொத்தம் 75 மாணவர்கள் கல்வி பயின்றனர். அப்போது பள்ளியின் ஆண்டு செலவீனம் ரூ.2,500/- ஆக இருந்தது. இப்பள்ளியின் பள்ளியிறுதித் தேர்வானது 1923 ஆம் ஆண்டில் நடைபெற்றது. அதில் 24 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அதில் தேர்ச்சி விழுக்காடு 33 சதவிகிதமாக இருந்தது. 1978 ஆம் ஆண்டில் மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்ட போது மேல்நிலைப்பிரிவில் 191 மாணவர்கள் பயின்றனர். 1990களில் பள்ளியின் மாணவர் எண்ணிக்கை ஏறக்குறைய நான்காயிரம் என்ற அளவிலும் பணியாற்றிய ஆசிரியர்களின் எண்ணிக்கை நூற்றைக்கடந்தும் காணப்பட்டது. தற்போது 2017 - 2018 ஆம் கல்வியாண்டில் இப்பள்ளியின் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை 1300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். 2016 - 2017 ஆம் கல்வியாண்டில் மேல்நிலையில் 91 சதவிகிதமும் உயர்நிலையில் 90 சதவிகிதமும் தேர்ச்சி விழுக்காட்டைப் பெற்று வரலாற்றுச் சாதனையை படத்து தற்போது 100 விழுக்காடு தேர்ச்சி என்ற இலக்குடன் நூற்றாண்டில் பயணிக்கிறது இப்பள்ளி.
6 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் தமிழ் வழி, ஆங்கில வழி என்று இரு பிரிவுகளிலும் தற்போது வகுப்புகள் நடைபெறுகின்றன. மேல்நிலை வகுப்புகளில் கணிதம், அறிவியல், வரலாறு, வணிகவியல், கணினி அறிவியல், பொது இயந்திரவியல், பயிர் உற்பத்தி போன்ற பாடப்பிரிவுகளை முதன்மையாகக் கொண்டு பல்வேறு வகுப்புகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றன. இதில் பல்வேறு பிரிவுகளில் 100 விழுக்காடு தேர்ச்சியானது சில ஆண்டுகளில் பெறப்படுகின்ற நிகழ்வானது நமக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது.
எங்களது மாணவர்கள் எட்டுக்கல்வியைத் திறம்படப்படிப்பதோடு மட்டுமல்லாது உடல்வளமும் மனநலமும் சிறக்க பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. கடந்த சில வருடங்களாக மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும், மன அமைதி பெறவும் கல்வி கற்றலின் கவன ஒருங்கிணைவு பெறவும் பல்வேறு யோகாசனப் பயிற்சிகள் தினந்தோறும் அளிக்கப்படுகின்றன.
நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, சாரணர் இயக்கம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், பசுமைப்படை போன்ற அமைப்புகளின் வழியே கல்வி இணைச் செயல்பாடுகளை நிகழ்த்துகின்றனர் எண்கள் மாணவர்கள். எங்களது பள்ளியின் வளர்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகமும் பல சிறப்பான பணிகளைச் செய்து வருகின்றது.
மாணவர்களின் கற்றல் திறன்களை வளர்ப்பதற்கென்று பல்வேறு மன்றங்கள், பல்வேறு பாடங்களைச் சார்ந்து செயல்படுகின்றன. எண்கள் பள்ளியின் நூலகம் மிகப்பழமை வாய்ந்த ஒன்றாகும். கிடைத்தற்கரிய பல பழம்பெரும் நூல்கள் இங்குள்ளன. தற்போது 25,000க்கும் மேற்பட்ட நூல்களுடன் இந்நூலகம் இயங்கி வருகின்றது.
விளையாட்டுத்திறனை வளர்ப்பதற்கென்று எங்கள் பள்ளியின் உடர்கல்வித்துறை மிகவும் சிறப்பாக இயங்கி வருகின்றது. கடந்த சில ஆண்டுகளாக மாநில மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற எங்களது மாணவர்கள் பல்வேறு முதன்மைப் பரிசுகளைப் பெற்று வந்துள்ளனர்.
கடந்த நூறு ஆண்டுகளின் வரலாற்றைக் காணும்போது இப்பள்ளியில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று அவற்றில் பலர் ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியியல் வல்லுநர்கள், வழக்குரைஞர்கள், பல்துறை உயர் அலுவலர்கள், பல்நிலை ஊழியர்கள் என்று வாழ்வில் உயர்ந்துள்ளனர். 27/08/2017 அன்று நுற்றாண்டு நிறைவைக் காண உள்ளது எண்கள் பள்ளி. இத்தகு அறிய நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் உங்களது இதயப்பூர்வமான வாழ்த்துக்களையும் பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் நல்கிட உங்களை அன்போடு அழைக்கின்றது செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளி எந்நாளும் முன்னேற உழைத்துக் கொண்டிருக்கும் நாங்களும் உங்களை அழைத்து மகிழ்கின்றோம்.
இங்ஙனம்
தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் புரவலர்கள்.