09/06/2026
#புதிய_அதிபர் #மற்றும் ிபர்கள் #நியமனம்
நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் புதிய அதிபராக அஷ்ஷெய்க் முஹம்மட் முஹம்மட் அஸ்லம் பலாஹி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
20 வருடங்களுக்கு மேற்பட்ட ஆசிரியர் மற்றும் அதிபர் சேவை அனுபவம் கொண்ட இவர், கல்வி, நிர்வாகம் மற்றும் மாணவர் வழிகாட்டல் துறைகளில் சிறந்த அனுபவத்தையும் திறமையையும் கொண்டவராக அறியப்படுகிறார். இவரது நியமனம் கல்லூரியின் கல்வி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்கு மேலும் வலுச்சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அதிபர் மற்றும் உப அதிபர்கள் நியமனம் மற்றும் அறிமுக நிகழ்வு கல்லூரியின் கூட்ட மண்டபத்தில், கல்லூரியின் தலைவர் அல்-ஹாஜ் ஏ.எம்.எம். ரஸீன் அவர்களின் தலைமையில், நிர்வாக அலுவலகத்தின் ஒருங்கிணைப்பில் 2026.06.07ம் திகதி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் கௌரவ நீதிபதி அல்-ஹாபிழ் அப்துல்லாஹ் அவர்கள் விசேட அதிதியாகக் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.
மேலும், கல்லூரியின் பொருளாளர் அல்-ஹாஜ் ஏ. ஆதம் பாவா (பொறியியலாளர்), செயலாளர், நிர்வாக சபை உறுப்பினர்கள், புதிய அதிபர், உப அதிபர்கள், ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் போது புதிய அதிபர் மற்றும் உப அதிபர்கள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், கல்லூரியின் கல்வி மேம்பாடு, ஒழுக்கக் கட்டமைப்பு, நிர்வாக வலுவூட்டல் மற்றும் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
அத்துடன், உப அதிபர்களுக்கான கடமைப் பட்டியல்களும் கையளிக்கப்பட்டன. புதிய நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் கல்லூரியின் கல்வி மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளை மேலும் திறம்பட முன்னெடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
கலந்துகொண்ட அனைவரும் புதிய அதிபர் அஷ்ஷெய்க் முஹம்மட் முஹம்மட் அஸ்லம் பலாஹி அவர்களையும் உப அதிபர்களையும் அன்புடன் வரவேற்று, அவர்களது பணிகள் வெற்றிகரமாக அமையவும், கல்லூரி கல்வி மற்றும் ஆன்மீகத் துறைகளில் மேலும் முன்னேற்றம் காணவும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
ஊடகப் பிரிவு
காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி
நிந்தவூர்